horse

horse

Monday, August 31, 2015

ரத்த அழுத்தம்


01. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான உணவு, பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும்; திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்கு தேவை. அந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். அந்த ரத்த ஓட்டம், ஒருவித அழுத்தத்தால் தான், உடல் முழுக்க செல்கிறது. அதைத் தான், ரத்த அழுத்தம் என்கின்றோம். 
02. உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்?எந்த காரணமும் இல்லாத நிலையில், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு, ‘முதல் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். இதில், மரபணு சார்ந்த ரத்த அழுத்தமும் அடங்கும். கர்ப்பத் தடை மாத்திரை உட்கொள்ளுதல், வேண்டாத தீய பழக்கங்கள், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு, ‘இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். 
03. மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா?
நவீன காலத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகளை உண்பது, மிகவும் சாதாரணமாகி விட்டது. இதில், ருசிக்காக அதிகளவு கொழுப்பு பொருட்களும், உப்பும் சேர்க்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோருக்கு, இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 
04. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்?
சிறுநீரகக் கோளாறுகள், ரத்தம் சிறுநீரகங்களுக்குக் குறைவாகச் செல்லுதல், பக்கவாதம், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், ஹார்மோன்களின் அளவு மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. 
05. ரத்தத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால், ரத்த அழுத்தம் மட்டுமின்றி, சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறதாமே?
உப்பை அதிகளவில் உட்கொள்வதால், அது ரத்தத்தில் கலக்கிறது. உப்பின் அடர்த்தி நிலையை குறைக்க, ரத்தம், உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக் கொண்டு, சிறுநீரகம் மூலம் அதை வெளியே தள்ள முயல்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. 
06. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுமா?
கண்டிப்பாக உதவும். அதிகாலை நடைபயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தல் நல்லது. யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது, மன அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால், 10 மி.மீ., அளவு உயர் ரத்த அழுத்தம் குறையும் என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
07. எவ்வாறு நடைபயிற்சி செய்ய வேண்டும்?
மூச்சு இரைக்க நடைபயிற்சி மேற்கொள்ளக் கூடாது. நடையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்; பாதம் முழுவதும், ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை நேரத்தில், வெயிலுக்கு முன் நடப்பது நல்லது. 
08. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, உணவுக் கட்டுப்பாடு தேவையா?
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்; வயிறு புடைக்க உண்பதை தவிர்ப்பது நல்லது. உண்ட உணவு செரிக்கும் முன்பே, அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும்; நீண்ட பட்டினி கிடப்பதும், உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும். எண்ணெயில் பொரித்த உணவுகள், புளிப்பு பண்டங்கள், மசாலா பொருட்கள், காபி, டீ, பருப்பு வகைகள், மாமிச உணவுகள், வாயுவை பெருக்கும் உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். 
09. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் பராமரிக்க, என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
கீரைகள், பழங்கள் போன்றவற்றை, உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குப்பைமேனி கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கக் கூடாது.
10. உணவு மாற்றம் மட்டுமல்லாமல், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் தேவையா?
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்; மது அருந்துதல் கூடாது. இப்படி, சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக் கொண்டால், ரத்த அழுத்தம் மட்டுமல்ல; நீரிழிவு நோயிலிருந்து கூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை தவிர்க்க…


ம்மில் பலர் நள்ளிரவில்தான் உறங்கவே செல்கிறோம். காலை எட்டு மணிக்குக் குறைந்து எழுவது சிரமம். இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மை நோய் நம் சமூகத்தில் மெள்ள அதிகரித்துவருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்க எளிமையான எட்டு வழிகளை மேற்கொண்டால் போதும், தூக்கம் சுகமாகும்.
குறித்த நேரத்தில் உறங்குதல்
தினமும் குறித்த நேரத்தில் உறங்கத் தயாராகுங்கள். தூங்கும் நேரத்தை அடிக்கடி மாற்றாமல், எந்த நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை முடிவுசெய்து, அந்த நேரத்தில் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால், குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தினால், நம் உடல் மற்றும் மன நலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்கூடாக உணர முடியும். தினமும் ஏழெட்டு மணி நேரம் தடையற்ற உறக்கமும் ஓய்வும் உடலுக்கு அவசியம்.
சீரான உணவு அவசியம்
படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, உணவை முடித்துவிட வேண்டும். இரவில் உணவை அறவே தவிர்ப்பதும் கூடாது. வயிறு  நிறையச் சாப்பிடுவதும் கூடாது. அதிகம் மசாலா சேர்க்காத, எண்ணெயில் பொரிக்கப்படாத, மைதா சேர்க்கப்படாத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
டி.வி பார்த்தல்
படுக்கை அறையில் டி.வியை வைக்க வேண்டாம்.ஹாலில் மட்டும் டி.வி இருக்கட்டும். இரவு வேளையில் மனதை உலுக்கும் திகில் படங்கள், வன்முறை நிறைந்த படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து, மனதுக்கு இதமான பாடல்கள்,  சிரிக்கவைக்கும் கார்ட்டூன்கள், காமெடி சேனல்கள் போன்றவற்றைப் பார்க்கலாம்.  டி.வி பார்க்கும்போதே தூக்கம் வந்துவிட்டால், டி.வியை அணைத்துவிட்டுப் படுக்கை அறைக்குச் செல்வது நல்லது.
காஃபின் தவிருங்கள்
காபியில் இருக்கும் காஃபின் எனும் வேதிப்பொருள், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர் களைத் தூண்டிவிடும். இதனால், மூளை சுறுசுறுப்பு அடையும். இரவு நேரத்தில் காபி அருந்துவது உறக்கத்தைப் பாதிக்கும். மாலை 6 மணிக்கு மேல் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடவும். காஃபின் சேர்க்கப்பட்ட கார்பனேட்டட் குளிர்பானங்கள், சாக்லேட்டுகளைத் தவிர்ப்பதும் நல்லது.
வெளிச்சம் வேண்டாம்
தூக்கத்துக்கு மெலட்டோனின் எனும் ஹார்மோன் சுரப்பு அவசியம். இருட்டான சூழ்நிலையில்தான், இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்கும். முடிந்தவரை இரவில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். வெளிச்சம் தேவைப்பட்டால், படுக்கையறையில் மிகவும் மெலிதான வெளிச்சம் தரும் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாம்.
படுக்கையறையில் கவனம்
படுக்கை அறையைத் தூங்குவதற்கு ஏற்ற சூழலில் வைத்திருக்கவேண்டும்.  அறையின் வெப்பநிலை, உறக்கத்தைக் குறுக்கிடாதவாறு அமைத்துக்கொள்வது நல்லது. டி.வி, லேப்டாப், டேப்லெட் போன்றவற்றைப் படுக்கையறைக்குள் பயன்படுத்தாதீர்கள்.  படுத்தவுடன், தூக்கம் வரவில்லைஎனில், வேறு அறைக்குச் சென்று பிடித்தமான ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடலாம். நன்றாக உறக்கம் வந்த பிறகு, படுக்கையறைக்கு வந்தால் போதும்.
புகை, மதுவுக்கு நோ
புகை, தூக்கத்தும் பகைதான். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் தூக்கத்தைத் தொந்தரவு செய்யும். எனவே, புகைபிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்தும்போது, அதில் உள்ள ஆல்கஹால் காரணமாக போதையில் மயக்கம் ஏற்படுமே தவிர, நல்ல தூக்கம் வராது.  மது, மனசுழற்சி கடிகாரத்தைப் பாதிக்கும்.  இதனால், சீரற்ற வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். எனவே, மதுவை கட்டாயம் தவிருங்கள்.
சைலன்ட் மோடுக்கு மாறுங்கள்
தூக்கமின்மை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம் மொபைல். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இரவில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு செல்போன் இல்லாமல் தூங்க முடியவில்லை, காலையில் வாட்ஸ்அப்பில்தான் விழிக்கிறீர்கள் எனில், நீங்கள் மொபைலுக்கு அடிமை என அர்த்தம். தினமும் இரவு ஒன்பது மணிக்குள் பேசவேண்டியவர்களிடம் பேசிவிட்டு, மொபைலை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள். அவசர, அவசியமின்றி இரவில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நிம்மதியான உறக்கத்துக்கு நல்ல வழி.
இன்சோம்னியா அறிகுறிகள்
குறித்த நேரத்தில் தூக்கம் வராதது, அடிக்கடி தூக்கத்தைத் தொலைப்பது, தினமும் தூக்கத்தின் இடையே அடிக்கடி விழிப்பது, நன்றாகத் தூங்கிய உணர்வு இல்லாமல் இருப்பது போன்றவை அனைத்தும் இன்சோம்னியாவின் அறிகுறிகள்.  இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், மருந்தகங்களுக்குச் சென்று, சுயமாக மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவது ஆபத்தானது. உளவியல் நிபுணர் அல்லது மனநல நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.